என்னவாயிற்று என் பாரதி வீணை ???
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ,....
என்ற பாடலின் சந்தம்....
செத்துப் புவியிடை வீழ்ந்தான் -- ஆகா
பெற்றுத் தீருமுன்னே பெற்றிட்டோம் என்றான்.
ஊனுயீர் சிந்தை கலந்து -- இந்த
நானிலம் இசைக்க வீணையும் தந்தான்
பெற்றச் சுதந்திரம் இன்று -- நடு
ரோட்டில் முறைகெட ஆடிட கண்டோம் ..
கண்டோம் கண்டோம் கண்டோம் - வீணை
வெட்டித் தீதனில் எரிப்பதைக் கண்டோம்
சொந்த சகோதரர் இலங்கைத் -- தீயில்
வெந்து தவிப்பதைக் கண்ணாரக் கண்டோம்
மாக்களைக் காத்திடும் நாமோ -- மாதர்
நொந்து இறப்பதைப் பார்த்திட லாமோ....?
உண்டென்றால் ஒன்றுசெய் சக்தி -- கடல்
உள்கொண்டு பாரதம் லங்கைசேர் சக்தி
வந்தோரை வாழ்வித்த நாமே -- வஞ்சம்
செய்தாரை உளமார வழ்விக்க லாமே ...!!
"தேசத்தை காத்தல்செய் " என்றாய் -- மக்கள்
வேடத்தைக் காணாது பாக்கள் ஏன் செய்தாய் ..?
தக்கத்தக தக்கத்தக தக்கா -- என்று
கூத்திட்டு ஆடிட்டார் நாடாளும் மக்கள்
கூறிட்டு வித்திட்டார் நாட்டை -- தக்கத்
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ...
வெட்டிப் புசித்திட்டார் தங்கம் -- இங்கே
ஒட்டிக் குடல்வற்றி ஏழையின் அங்கம்
பிச்சைப் பிழைப்புதான் ரோட்டில் சிலர்
உச்சி குளிர்ந்தனர் சுவிஸ்பாங் நோட்டில்
அச்சத்தின் உச்சத்தில் பெண்டிர் -- காந்தி
கண்கண்ட ஒருகனவு இதுதானா கண்டீர்
நாமேமோ பலியாடு சேவல் -- மும்பை
உயிர்கொல்லிக் கேனோ பலகோடி காவல்
மற்றொன்று வேண்டிட்டேன் சக்தி -- பாரில்
எங்கெங்கு கண்டாலும் முறைகெட்ட புத்தி
முட்டித் தெறிக்கட்டும் மேகம் -- தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்
டட்டட்டட டட்டட்டட டட்டா -- தலை
தட்டி ஒலிக்கட்டும் இடிதட்டும் தாளம்
கொட்டி நிரப்பட்டும் மாரி -- இந்த
வையம் துறக்கட்டும் மக்களை வாரி
அத்துணை அள்ளிப்போ காளி -- ஒற்றை
கடல்கொண்டு உருவாக்கு பேரலை ஆழி
வீழட்டும் வீழட்டும் பூமி -- சக்தி
உனதருமை இதுவென்று இப்போதே காமி...
மீண்டு முளைக்கட்டும் மெதுவாய் -- மக்கள்
மேலின்றி கீழின்றி எல்லோர்க்கும் பொதுவாய்
அன்றாயின் சமஉரிமை காப்போம் -- என்
முண்டாசன் கண்டிட்ட சமுதாயம் காப்போம்....
நிறைவு.
(ஐதராபாத் மகாகவி பாரதி விழாவின் கவியரங்க நிகழ்வில், பாடிய கவிதை)
(கவியரங்க தலைமை "கவிமாமணி . இலந்தை ராமசாமி)
இவண் ,
கார்த்திகேயன் .இ